சான்றோன்!

சான்றோன் என்பவன் யார்? எந்த விஷயத்திலும் சிந்தித்து, நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்பின் பாற்பட்டுச் செயல்படுபவனே சான்றோன்.  சான்றோன் பெருமை பெரும் பேச்சு பேசப்பட்டது. அவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் உறுதிகூறுவர் பெரியோர்.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

பெற்ற பொழுதினைக் காட்டிலும் தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் சொல்வதைக் கேட்கின்ற தருணத்தில் தாய் பெரிதும் மகிழ்வார்.

சான்றோன் எப்படி உருவாகிறான்? யார் அவனை உருவாக்குவது?

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

ஆக, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடமை. அப்படியானால் ஈன்று புறந்தருதலோடு தாயின் பணி முடிவுற்றதா?  இல்லை. ஈன்று புறந்தருதல் என்பதை நம் மக்கள் கருவினின்றும் வெளித் தருவது என்று பொருள் கொள்கின்றனர். அது தவறு. 5 வயது வரை குழந்தை தாயிடம் அதிக ஒட்டுதலோடு இருக்கும். அந்த 5 வயதுக்குள் அதன் மனதில் என்ன விதைக்கப்படுகிறதோ அதுவே அதன் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் ஆதாரம்.

அடிப்படையை உறுதியாகப் போட்டு  அதன் மீது கட்டப்பட்டு பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் கோவில் போல,  அடிப்படை அறிவை அறத்தோடு ஊட்டி சான்றாண்மைக்கு வித்திடுவது தாய்க்குக் கடன். பொதுவாக அந்தக் காலத்தில் 5 வயதுக்கு மேல் தான் பள்ளிக்கு அனுப்புவர் குழந்தைகளை. (இப்போது உள்ளது போல் “சமாளிக்கவே முடியலை,  PreKG சேர்த்துவிட்டேன்” என்ற சால்ஜாப்புகள் அப்போது கிடையாது)

5 வயது வரை வீட்டில் தாய்-தந்தை, தாத்தா-பாட்டி, மற்றேனைய உறவுகளுடன் வளரும் குழந்தை, நீதிக் கதைகள், இதிகாச புராணங்கள், எண்-எழுத்து, ஆகியன கற்று வளரும். வீட்டுக்கு வெளியே கல்விச்சாலைக்குப் படிக்கச் செல்கையில் மேலே படிக்க ஏதுவாக அடிப்படை தப்பாது கற்றுத் தருவதும், பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், அன்பு பரிமாற்றங்கள், உறவுகள், நட்பு இதெல்லாம் கற்றுத் தருவதும் தாயின் கடமை.

5 வயதில் கல்விச் சாலையில் சேரும் குழந்தைக்கு பால பாடங்களாக சுலோகங்கள், சமய இலக்கியப் பதிகங்கள், ஆகியன கற்றுத் தரப்படும். இந்த அடிப்படைகள் 12 வயதில் முடிந்தபின் தர்க்கம்,  நீதி, நிர்வாகம் முதலியவற்றின் அடிப்படை கற்பிக்கப் படும். இங்கேதான் தந்தைக்கு வேலை வருகிறது. தெளிவாகச் சிந்திக்கக் கற்றுத்தருவது இந்த வயதில் தான் தேவை. பல விஷயங்களை அறிந்து தவறுகளின் பால் ஈர்க்கப்படுவதும் அந்த வயதில் தான்.

எனக்கு 5 வயதில் இராமயணமும் மகாபாரதமும் மனப்பாடம். பாடல்கள் தெரியாது, கீதை தெரியாது. ஆனால், கதையும் அதனால் அறியப்படும் நீதியும் மனப்பாடமானது. 10 வயதில் சக்ரவர்த்தித் திருமகனும் வியாசர் விருந்தும் படித்தேன்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 10ஆம் வகுப்பு படிக்கிறபோது, நம் நாட்டுத் தங்கத்தை அடகு வைத்து நாம் கிட்டத்தட்ட போண்டி என்று பிரதமர் சந்திரசேகர் அறிவித்தார். பிறகு மன்மோகன் சிங் நிதியமைச்சராகி நம் ரூபாயின் மதிப்பை பாதாளத்துக்குக் குறைத்தார். அப்போது மிக புத்திசாலியாக யோசித்து என் தந்தையிடம் கேட்டேன். “இப்போ அமெரிக்காகிட்ட கடன் வாங்கினா நமக்கு நிறையப் பணம் கிடைக்கும். அதை வெச்சு நிறைய செலவு பண்ணலாம். இல்லையாப்பா”?

“மடத்தனமா யோசிக்காதே” என்றார். “ஏன்?” என்றேன். “இப்போ கடன் வாங்கினா நிறையப் பணம் கிடைக்கும் சரி, திருப்பிக் கட்டும் போதும் அதிகமாக் கட்டணுமே அப்போ என்ன செய்வே? வட்டி வேற சேருமே?” என்று கேட்டார். பதில் தெரியவில்லை. “கடன் வாங்கினா ஒண்ணுக்கு நாலு ரூபாயா கிடைக்கும் தெரியுமா!” என்று நண்பர்களிடம் சொல்ல, “அட ஆமாண்டா!” என்று அவர்கள் ஆச்சரியப்பட்ட போது தலைக்குப் பின்னே தோன்றிய ஒளிவட்டம் இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

“அப்படின்னா ரூபாய் மதிப்பு குறைச்சது தப்பா?” என்று கேட்டேன். “இல்லை, இந்த நேரத்தில் ஏற்றுமதி அதிகமானா நமக்கான வருமானமே அதிகமா வரும். அதைச் செலவழிச்சா ஒரு பய கேக்க முடியாது”, என்றார். ஏற்றுமதி, இறக்குமதி, கடன் ஆகியவை குறித்து சுருக்கமாகச் சொன்னார்.

வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்தால் பெருந்தொல்லை என்று கடனாளிகள் பலரை உதாரணம் காட்டிச் சொன்னார். கடன் வாங்கிச் செலவழித்தல் தவறு என்ற அடிப்படை புரிந்தது. நாம் சம்பாதிப்பதையே நாம் செலவு செய்ய வேண்டும், பிறரிடம் வாங்கிச் செலவழிக்கக் கூடாது என்பதும் புரிந்தது. +1ல் வணிகப் பாடமும் பொருளாதாரமும் படித்த போது “இது அதுல்ல!” என்று தோன்றியது.

ஆக, மனிதனைச் சான்றோனாக்கும் அடிப்படை வித்தை சரியான முறையில் சிந்திக்கக் கற்றுத் தருவதுதான் என்பது இப்போது யோசித்ததில் புரிகிறது.

Explore posts in the same categories: எம் எண்ணம்

2 Comments on “சான்றோன்!”

  1. சுந்தர்வேல் Says:

    பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் பற்றி எதிர்பார்க்கிறேன். நன்றி.


  2. விரைவில் பொருளாதாரமும், நிர்வாகமும் பற்றி எழுதுவேன். நன்றி திரு.சுந்தர்வேல்.


Leave a comment